கோவை வெண்பா

கோவை வெண்பா

 

அன்பும் அமைதியும் பண்பும்கைக் கொண்டுநல்

முன்புடன் வாழும் இனியவன் – வன்கா

டுலவும் விலங்கினை நேசிக்கும் பாசம்

நிலவும் உயர்வுக்கு வித்து.

(1)

அன்பு மலரே அருமை மலரே

வந்தேன் தினமும் மலர்ந்தேன் மனமெல்லாம்

பாடித் துதித்தேன் மலரேயென் நெஞ்சகம்

நாடிச் சிறந்திடு இன்று.

(2)

மறைத்தாலா தாழை மணங்குறையும் நீரில்

கரைத்தாலா தங்கம் கரையும் – செம்பில்

இறைத்தாலா வற்றிடும் ஏழுகடல், நெஞ்சில்

மறையாது காதல் மலர்.

(3)

சிரித்த முகமும் சிதையா மனமும்

கரித்த பிறகும் வசையா – தரித்த

வழுவும் பொறுமை யுடனேற் பதுதான்

அழுக்காறு கொள்ளா அகம்.

(4)

பகைவர் இழைத்த கொடுமை எதுவும்

பகைமை நிறையா மனதில் சிறிதும்

ஒழுக்கம் தவறி நடவா திருத்தல்

அழுக்காறு கொள்ளா அகம்.

(5)

பெற்றோர் மதியா பிறன்மனை நாடி

கற்றோர் வழியும் நடவாது – குற்றம்

உடலுடன்  சேர்ந்ததென வாழ்பவ னுக்கு

இடமுண்டோ வீட்டில் இனி.

(6)

காலத்தில் காமத்தைக் கட்டுக்குள் வைக்காது

காட்டாறு போல்நெஞ் சலைந்தால் – காலத்து

நடக்கின்ற குற்றங்களைக் குன்றேற்றி னாலும்

இடமுண்டோ வீட்டில் இனி.

(7)

உடற்கு உயிராம் உலகில் ஒருவன்

கடற்குப் படகினைப் போல – மடந்தை

அழைப்பை இழக்கும் முதுபெரும் இனமாம்

உழைப்போர் கரத்தை உயர்த்து.

(8)

தேனினுக் குண்டோ நிலவினுக் குண்டோ

இனிய சுவைக்குண்டோ சாதி – பணிகின்ற

நாதியிலா மக்களில் வேறொடு சாய்த்தியே

சாதிகள் இல்லையெனச் சாற்று.

(9)

உடலுடன் கொள்ளையும் வீடுடன் பொருளும்

கடலிடை எந்தன் மனங்கள் – தடயிலை

தன்னை உடையெனக் கட்டும் தமிழர்க்குத்

தன்மானங் காக்கத் தவிப்பு.

(10)

எம்மொழி மக்களும் தம்மொழி நூலெனச்

செம்மையாய் வாதிடும் நூலிலே – நம்மில்

ஒருமொழி காட்டா முதுபெரும் நூலாம்

திருக்குறளில் உண்டாம் தமிழ்.

(11)

பொறுப்பும் பொறுமையும் இல்லாத வாழ்வு

பொறியில் தெளித்தநீர் போலாம் – பிறப்பிலே

காளை வடுவை தமதெனக் கொண்டிடின்

நாளை நமதே நவில்.

(12)

சாதிகள் இல்லை எனுமொரு சட்டம்

வாதியின் சிந்தை வரவேற்கும் – வேதியன்

திருமணம் செய்ததும் வேதனை யாழ்த்தும்

திருத்தப் படாதஒரு தீர்ப்பு.

(13)

பெண்மையில் சீர்மையும் பேச்சில் துணிவுடன்

உண்மையே வாழ்வாய் எழுத்தில் இனிமையாய்

பாரிடை மேன்மையும் பெற்ற தலைவனாம்

பாரதி தாசனைப் பாடு.

(14)

அடிமை வகையை அடக்கி, யடுத்துக்

குடிமை உலகில் உயர்த்த, கடிது

படிமை தவிர்த்து துணிவொடு செல்வாய்

விடியலை நோக்கி விரைந்து.

(15)

தீயினால் சுட்ட பழமது வானாலும்

நாவினால் தீண்டாத தாகுமேல் – தீங்கனியும்

நாளான பாழ்பட் டழிபொருள் போலவே

பாழ்பட்டு வீணாகப் போம்.

(16)

ஊட்டிய பாலுக்கும் ஊற்றுகின்ற பாலுக்கும்

ஊடே அமைவது வாழ்க்கை - இருப்பினும்

பேரற்ற வாழ்க்கையை யாதொருவன் விட்டொழித்தால்

நோயற்று நாடும் உலகு.

(17)

எங்கும் புகழுடன் எங்கும் அகமுடன்

தங்குமிட மெல்லாம் தமிழ்நெறிச் – சங்கம்

அமைத்தநம்சை வப்பெரியார் மங்கலங்கி ழாரின்

நினைவுநா ளென்றென்றும் வாழ்.

(18)

கரும்பு பிழிந்துசாறு ஊற்றிக் குடித்தால்

எறும்பு உறுஞ்சுமே சக்கை – அதுபோல

நட்பில் விரிசல் வருகின்ற போழ்தும்

கடன்தீர போகாது நட்பு.

(19)

கொள்வது கொள்கல னானாலும் கொள்ளும்

அளவோடு கொள்வதுதான் இயல்பு – மிகுமாயின்

அள்ளிப் புகுத்தியதின் மேலமர்ந்தி ருப்ப

தடுத்து முதலாய்ப் புக.

(20)

மறைத்தாலா தாழை மணங்குறையும் நீரில்

கரைத்தாலா தங்கம் கரையும் – குவளையில்

அள்ளினாலா வற்றிடும் ஏழு கடலில்

மறையாது காதல் மலர்.

(21)

கருவிலே தந்தை இழந்தபச் சையர்

உருவிலே தந்திய ராவளர்ந்து வந்தார்

தெருவிலே வாணிகத் தோராய், அறிவில்

அருமை மொழிபெயர்ப் பார்.

(22)

கொடியிலா தேசியக் கம்பம் அமைப்போர்

கொடியிலா தோட்ட  மமைப்பதோ - நாட்டில்

கொடியிலாலி டையாளைத் தீண்டல்

பிடியிலா நாட்டில் இரு.

(23)

துடியிடை என்றும் பிடிபடாமல் வீழ்ந்தால்

பிடிநடை கைக்குள் அடங்கா – நடிப்பின்

கடுவாக்குச் சொல்லுகின்ற மாக்களெல்லாம் கூடி

சுடுசொல்லால் நாக்குழற்றிப் பேசு.

(24)

வியாபார நோக்கில் விளம்பரம்மே லிட்டால்

அயலவர் தன்நாட்டில் நம்பிக்கை கொள்ள

துயர்விலா கைகள்நற் றூய்மைஎய் திட்டால்

உயர்வினை மீதூரக் காட்டு.

(25)

நின்னை உணர்ந்ததும் நின்னவன் நற்றாளை

அன்னையர் என்றென்றே போற்றுவாய் – என்றென்றும்

இன்பமது கூட்டியே துன்பமது நீக்கிட

அன்பைப் பெருக்குவது நட்பு.

(26)

ஊர்ச்சுற்றி வாங்கிய காசில் உணவுண்டால்

பேர்பற்று விட்டோடி நிற்கும் – அதுவதனால்

கால்வயிறு கொண்டதே யானாலும் சீர்மை

கடனேது மில்லாத கூழ்.

(27)

எதிர்பார்த்து மீயுயர் பட்டங்கள் கிட்டின்

பெரும்புகழ் எய்துவ தென்பதில்லை – என்றாலும்

என்றும் கிடைக்காது என்றது கிட்டின்

அதுவேதான் நின்று நிலைத்து.

(28)

பெருமை மிகுவெய்தி பேர்பெற் றவனும்

சிறுமை மிகுவெய்தி பேர்பெற் றவனும்

குனியா நெடுந்தலையும் தானாய்க் குனியுமே

வாயிற் சிறுத்த விடத்து.

(29)

பகலவன் வானுயர்ந்து சுட்டெரித்து வந்தாலும்

பார்போற்றும் உன்னதப் பங்காளி யெல்லாம்

மறைவிடத்து வாழ்வதற்கு எத்தனிக்க மாட்டாரே

வாழ்வாங்கு வாழ்ந்து இரு.

(30)

செல்வங்கள் கொட்டிப் பெரியதோர் வீட்டினைக்

கல்மணல் சுண்ணாம்பு டன்சேர்த்துக் கட்டி

துணையுற்று நீண்டநாள் வாழ்வதாக எண்ணி

நிலையற்ற வீட்டில் புகு.

(31)

வயல்கலெல் லாமுழுப வர்க்குக் கொடுத்த

நயவஞ் சகமிலாத அன்பர்க்கு – என்றும்

கயவன் ஒருவனுட்பு குந்தா லவன்செயல்

கோடிகொடுத் தாலும் பிழை.

(32)

ஏற்றிவிட்ட ஏணி மிதிபட்டா லொன்றுமாகா

ஊட்டிவிட்ட நற்கைக்குப் பஞ்சம் வரும்போது

கைகொடுத்துத் தூக்கவில்லை என்றாலும் என்றும்

புறஞ்சொல் நவிலா திரு.

(33)

இன்னலோடு வாழும் முறையில் சுகம்கண்டு

பல்லோர்முன் வாழ்வாங்கு வாழ்ந்தாலும் – இல்லார்முன்

இல்லாராய் வாழா தவன்வாழ்க்கை, நீளா

வரங்கொடுத்த வன்தலையில் கை.

(34)

பலகுரலும் மோர்குர லாயொலிக்குந் நேரம்

சிலகுரலும் ஒத்திசைத்துப் பாடும் – அதுவெதுவும்

பாங்காய்ப் பதிவதில் விட்டேறிப் போகுமே

நீரால் விலகும் அழுக்கு.

(35)

கூர்நோக் குடையாரெல் லாரும் சிறப்புடன்

வாழா தவரா யினுமவ ரென்றென்றும்

பாழாவார் வன்கரம்பு பூமியது போல

தவழ்ந்துமே மேலெழு வார்.

(36)

மிதித்தேறும் சாய்ந்தஏணி நீக்காமல் நின்றால்

இறங்குதல் நன்றா வதுபோல் – எவரையும்

ஏற்றிவிட்டார் ஏமாற்றா தாங்கிப் பிடிப்பதே

ஏற்றிவிட்ட சான்றோர்க் கழகு.

(37)

பிறர்சிறப்பு பேசிசபை யோரில்சான் றோனாய்

எவர்மாற்றும் போற்றப் பெறுபவர்எஞ் ஞான்றும்

அவர்பெருமை தானாகப் போற்றா திருந்தால்

அவர்பெருமை பேசும் சபை.

(38)

பொருளில்லார் துன்பத்தில் நீந்திய போழ்தும்

குறையில்லா வாழ்க்கை சுழற்றுவர் – தக்கார்

நிறைசெல்வம் ஈய்ந்திடினும் தேவைக்கே கொண்டு

நிறைவாழ்வை நாட்டுவதே சால்பு.

(39)

அடிமரம் வீழ்ந்தாலும் ஆடிக்காற் றுக்கும்

அசையாது தாங்கும் விழுதுபோல் – வள்ளல்

வளமுடன் வாழாத காலத் தவனின்

இரவலன் காப்பாதே சால்பு.

(40)

தெரிந்த உறவு தெரியாது என்றால்

அறியும் வரையில் பழகு – நடுவில்

மறதி எதுவும் இருந்திட்டால் போற்று

கடைசி நினைவு வரை.

(41)

கனமழை வந்தாலும் கண்கலங்கா ஆறும்

மனச்சுமை வந்தாலும் தேக்கா மனசும்

தினச்சுமை கண்டாலும் கல்மனம் கொள்ளா

திருந்துபார் வாழ்க்கை சுகம்.

(42)

சுகமான வாழ்க்கையென் றிட்டாலும் சுற்றம்

அகமறிந்து நிற்றிட்டு வாழ்வதெவ்வா றென்றால்

நகமறிந்து உள்ளடகி நிற்கும் சதைபோல்

பணிவாய், பணிவுடன் வாழ்.

(43)

நோய்கண்ட ஊணுடம்பு தக்கதொரு ஆற்றலுக்கு

உற்றதொரு உள்மருந்து கொள்வது சால்பெனின்

நோய்வர வாழாமல் வாழ்ந்து பழகிப்பார்

நோய்க்குநோய் வந்திடும் காண்.

(44)

அன்புடன் பைங்கிளி பண்புடன் ஐவிரல்

பற்றிட்டு ஊர்வலம் வந்தவள் கைப்பிடி

வேண்டா மெனத்தனியாய் நிற்குமவள், எப்பொழுதும்

முன்பிடித்த கைவிரலே காப்பு.

(45)

எறும்பூர தேய்ந்தகல் நாளடைவில் மாறாத

சின்னமாகும் என்பது நீதியாகும் – என்றாலும்

ஊர்ந்த எறும்பினது வாழ்க்கை வினவின்

கரும்புபிழிச் சக்கையைக் காண்.

(46)

வடுச்சொல்லு மிழ்ந்ததுகு ழந்தையா னாலும்

தடுக்காது விட்டால்பா ழாகும் – நடுநின்று

எச்சொல் விடுப்பதென தொட்டிலில் கூறிட்டால்

நச்சொல் விளையாது காண்.

(47)

தானாய் வளர்வதாகச் சொன்னாலும் ஆங்கேஓர்

தாயாய் ஒருவள் தெரியா திருந்திடுவாள்

தெரியா தவளைக் கணிக்குமந்த வேளை

தெளிவாவான் என்பதே ஊழ்.

(48)

காக்கை கரைந்து விருந்தை வரவேற்கும்

நாக்குச் சுழற்சியில ழுக்கு இருக்குமேல்

வாக்கால் கெடும்வி ருந்தது போலாகும்

செல்வாக்கில் லாஊர் விருந்து.

(49)

பெருமை மிகுபேர் தகுவதாகி விட்டால்

சிறுமை யொதுங்கிலது பாழாகும் – நேர்மை

தவறாது எப்பொழுதும் வாழ்ந்திட்டால், வான்புகழ்

என்றுமொ துங்காது காண்.

(50)

Comments